எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்த நூல் பரிபாடல். எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் பழம்பாடல் இதனை 'ஓங்கு பரிபாடல்' என்று சுட்டுவதால் இதன் சிறப்பு விளங்கும். பரிந்து செல்லும் ஓசையுடைய பாக்களால் அமைந்த ஒருவகைச் செய்யுளே பரிபாடலாகும். அதாவது, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும், பலவகை அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் பாட்டு என்று பொருள்படும். பரிபாடலின் இலக்கணத்தைக் குறிப்பிடும் தொல்காப்பியர், ‘அது நான்கு வகைப்பட்ட வெண்பா இலக்கணத்தை உடையது. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா மருட்பா என்று கூறப்படும் எல்லாப் பாவினுடைய உறுப்புகளைப் பெற்று வரும்; அது காமப் பொருள் பற்றிப் பாடப்படும்’ என்கிறார். அதாவது, தமிழின் சிறந்த பாடல்களான அகப்பொருள் பாக்களைக் கலிப்பாவினாலும் பரிபாடலாலும் பாடவது வழக்கம் என்பது தொல்காப்பியர் கருத்து.
ஆயினும் பரிபாடல் நூலில் முருகன் பற்றியும், திருமால் பற்றியும் இறையுணர்வுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே தொல்காப்பியர் காலத்திற்குப் பிந்தைய வழக்கமாக இதனைக் கருதலாம்.
பரிபாடலின் சிற்றெல்லை 25 அடிகளென்றும் பேரெல்லை 400 அடிகளென்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
பரிபாடலில் உள்ள பாடல்கள் அனைத்தும் மதுரையையும் பாண்டிய நாட்டையும் அதன் வளத்தையும், முருகன், திருமால் ஆகியோரின் சிறப்புகளையும், இருப்பையும், வையை ஆற்றையுமே பாடுகின்றன.
ଗତ ଅପଡେଟର ସମୟ
ଅଗଷ୍ଟ 10, 2024