கம்பராமாயணம் கதை முழுவதையும் காகிதப்புத்தகமாக எடுத்து செல்வது என்பது எளிதானது அல்ல.
மின்புத்தகம் எங்கும் எடுத்து செல்ல எளிமையானது. அதனால் முதல் முதலாக
கம்பராமாயணம் கதை முழுவதையும் Mukil E Publushing and Solutions Private Limited
மூலம் ஒரே மின் புத்தகமாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
படித்து மகிழுங்கள்.
முன்னுரை
கம்பர் வடமொழிக் காவியத்தைத் தென் தமிழ் மொழியில் கவிதைச் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துத்தந்திருக்கிறார். கம்பர்காவியத்துக்கே அவர் எடுத்தாளும் சொற்கள் தனிச் சிறப்பைத் தருகின்றன.
'செஞ் சொற் கவி இன்பம் அவர் ஊட்டியது. அவ்வின்பம் சிறிதும் குறையாது உரைநடையில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
கம்ப ராமாயணக் கதை மட்டும் எடுத்துக் கூறுவது இவ்வுரைநடை நூல். கதைக் கோவை கெடாமல் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கிறது இந்நூல்; உரைநடை இதற்குத் தனிச்சிறப்புத் தருகிறது.
சில பதிப்புகளைக் கண்ட இந்நூல் அழகாக அச்சிடப்பட வேண்டும் என்ற முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒளி அச்சில் தக்கதாளில் இந்நூல் வெளிவருகிறது.
இந்நூல் தரம் மிக்கதாக அமைய எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
எம் வெளியீடுகள் சில இலக்கியப் பின்புலம் கொண்டவை; அவை நிலைபேறு பெறத்தக்கவை என்பதால் மறுபதிப்புக் காண்கின்றன.
ரா.சீனிவாசன்
விமரிசனம்
ராசீ
அமரகவி பாரதியாரால் பாராட்டப் பெற்ற கம்பனின் காவியமான கம்பராமாயணம் இன்றைய உரைநடை உலகத்தில் புதிய உருவெடுத்து 'உரை நடை நூலாக வெளி வந்துள்ளது.
சிலபேர் உரை நடையைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிற இக்கால கட்டத்தில் உரைநடை ஆசிரியர் கவித்துவமான வரிகளை உரைநடையின் பெயரில் காவியச் சுவை குன்றாமல் செறிவான வரிகளுடன், நளினமான வார்த்தைக் கோப்புகளுடன் வளமையான தமிழில் வழங்கியுள்ளார் இலக்கிய சோதனைக்காரர் பேராசிரியர் ராசீ.
இவரின் புதுமுயற்சி வெற்றிபெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். தெளிவான சிறந்த சொல்லாட்சி ஆசிரியரின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும்.
இன்றியமையாத தருணங்களில் மட்டுமே 'கவிதை வரிகள் கண் சிமிட்டுகின்றன. மற்றபடி நூலெங்கும் உரைநடை ராஜ நடை போடுகிறது. பண்டித தமிழிலன்றிப் பழகு தமிழில், சுவைபட எழுதப்பட்டுள்ளதால் நூலின் பக்கங்கள், நம் விரல்
துடுப்புகளில் விரைந்து தள்ளப்படுகின்றன. தொய் வில்லாத ஆற்றொழுக்கான உரைநடை.
காட்சிகள் கண் முன்னே உயிர்பெற்று உலவும் அதிசயத்தை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்; இதனை மிகச் சிறந்த உலக அளவிலான நாடக நூல் என்று அறுதியிட்டுக் கூறலாம். பாராட்டு கம்பனுக்கு மட்டுமல்ல; போராசியர் ராசீக்கும் தான். உரையின் சிறப்புக்குச் சான்று:
இதோ:-அனுமனிடம் சீதை கூறியது 'தாரம் அல்லள் என்று சொல்லி என்னை ஒரம் கட்டலாம். அதற்காகத்தன் வீரம் காட்டாமல் இருப்பது அவன் ஆண்மைக்கு இழுக்கு என்பதை நினைவுறுத்து.....” என்றாள்.
'வாழ்வதா, வீழ்வதா என்பதுதான் என் வாழ்க்கைப் பிரச்சனை' என்றாள்.
மொத்தத்தில் அனைவருக்கும் பயனளிக்கும் நூல்; சிறந்த முயற்சி; பாராட்டுக்கள்.
எம்.எஸ். தியாகராஜன்