சின்ன வயதிலேயே அவர்கள் கேட்கும் கேள்விகளை மதித்தும் சிந்தித்தும் பதில் தரும் பெற்றோர்களே கைவிளக்காகின்றனர். அது எப்படிப்பட்ட சின்னஞ்சிறிய கேள்வியென்றாலும் பெற்றோர்கள் அதற்கு விடை தேட வேண்டும்.
“சோப்புக்குமிழி ஏன் வெடிக்குது?", "ஆகாயம் ஏன் விழலை?”, “சாருவுக்கு தாத்தா சொன்ன குட்டி குட்டிக்கதைகள்” சில குணங்களை குழந்தைகளிடம் சேர்க்க விரும்பி எழுதப்பட்டதே இந்நூல்.
கணையாழியில் சுஜாதா மூலம் 1993 முதலாக அறியப்படும் பா. சத்தியமோகன்(23.06.1964), திருச்சி மாவட்டம் துறை மங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நெய்வேலியில் மின்பிரிவில் தலைமைப் பொறிமேலாளர். அனுபவித்து நேர்வதைச் சொற்களால் துழாவி பிரபஞ்சம் முழுவதையும் தேடுபவராகவும்; தேடலின் வழியே பிரபஞ்சமே கவிதையாய் நேர்வதாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளும் மன உலகப் பயணம் இவருடையது.
வாழ்வின் அழுத்தமான ஒவ்வொரு கணத்திலும் ஒரு நடசத்திரத்தைத் தேடி எடுப்பவராகவும்; சீரான நிகழ்வுகள் நடுவே அபத்தம் ஒளிந்திருப்பதையும் தனக்கே உரிய மொழி லாவகத்தோடு பகிர்பவர். சங்ககால மொழி துவங்கி நவீன கவிதை இயங்குமுறை வழியே தனது முப்பதாண்டு கவிதை வாழ்வை 15 தொகுப்புகள் மூலமாக தமிழ் சமூகம் அறியத் தந்தவர். சமகால நவீனக் கவிதைகளில் ஞானகூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தேவதேவன், ஆத்மாஜீவ் வழியே, கவிதைமூலம் பேருண்மை மீது வரைந்த மொழிச் சித்திரங்களாக இவரது கவிதைகளை வாசகன் கவனிக்க முடியும்.