மொத்தம் 59 தடவைகள் மாணிக்க வாசகப் பெருமான் தன்னை “நாயேன்” என்று கூறிக்கொள்கிறார் என்று சொன்னபோது அதிர்ச்சி ஏற்பட்டது. தன்னடக்கமும் இறை நெகிழ்வும் அவ்வாறு கூற வைத்திருந்தாலும் 59 தடவைகள் என்ற எண்ணிக்கை யோசிக்க வைத்தது.
அதன் காரணம் என்ன என்றபோது அவர் கூறினார்: “நீதிமன்றத்தில் தன் கட்சி நபருக்குப் பரிந்து பேசும் வழக்கில் அந்த நபர் செய்த தவறையெல்லாம் தான் செய்தது போலவே வழக்காடும் நிலையில் மாணிக்க வாசகரும் தம்மை நாயேன் என்று கூறிச்செல்கிறாரே தவிர அவர் குற்றம் ஏதுமில்லை”
அந்தக் கோணத்தில் திருவாசகத்தின் அனைத்துப்பாடல்களிலும் உள்ள நாய் என்ற சொற்றொடர்கள் ஆராயப்பட்டதன் எளிய வடிவமே சித்பவானந்தர் உரையுடன் கூடிய இந்நூல்.
கணையாழியில் சுஜாதா மூலம் 1993 முதலாக அறியப்படும் பா. சத்தியமோகன்(23.06.1964), திருச்சி மாவட்டம் துறை மங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நெய்வேலியில் மின்பிரிவில் தலைமைப் பொறிமேலாளர். அனுபவித்து நேர்வதைச் சொற்களால் துழாவி பிரபஞ்சம் முழுவதையும் தேடுபவராகவும்; தேடலின் வழியே பிரபஞ்சமே கவிதையாய் நேர்வதாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளும் மன உலகப் பயணம் இவருடையது.
வாழ்வின் அழுத்தமான ஒவ்வொரு கணத்திலும் ஒரு நடசத்திரத்தைத் தேடி எடுப்பவராகவும்; சீரான நிகழ்வுகள் நடுவே அபத்தம் ஒளிந்திருப்பதையும் தனக்கே உரிய மொழி லாவகத்தோடு பகிர்பவர். சங்ககால மொழி துவங்கி நவீன கவிதை இயங்குமுறை வழியே தனது முப்பதாண்டு கவிதை வாழ்வை 15 தொகுப்புகள் மூலமாக தமிழ் சமூகம் அறியத் தந்தவர். சமகால நவீனக் கவிதைகளில் ஞானகூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தேவதேவன், ஆத்மாஜீவ் வழியே, கவிதைமூலம் பேருண்மை மீது வரைந்த மொழிச் சித்திரங்களாக இவரது கவிதைகளை வாசகன் கவனிக்க முடியும்.