தமிழகத்தின் தலைசிறந்த தமிழ்க் காப்பியங்களுள் ஒப்புயர்வற்றவை ஐந்து சிலப்பதிகாரம்; மணிமேகலை; வளையாபதி; குண்டலகேசி; சீவக சிந்தாமணி.
இவற்றுள், முதல் நான்கும் நாடகங்களாக நடிக்கப்பட்டன. திரை ஓவியங்களாகவும் திரையிடப்பட்டன. என்ன காரணத்தாலோ சீவகசிந்தாமணியை உலகுக்கு அறிமுகப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்தனர். சமயக் காழ்ப்புணர்வே முதல் காரணம் எனவும், காமரசம் ததும்பியது, எனத் தவறான எண்ணம் கொண்டது இரண்டாவது காரணம் என்றும், எண்ணத் தோன்றுகிறது. இரண்டு நோக்கங்களுமே தவறானவை.
மன்னனின் மகன் சீவகன்! குருகுலத்தில் தோன்றிய சிங்கம்!! ஏமாங்கத நாட்டின் அரசன்!!! இவ்வுண்மை இராசமாதேவியின் புலம்பலால் வெளிப்படுகிறது. “நாட்டைக் காப்பது உன் கடமை” இஃது ஆசிரியர் அச்சணந்தி முனிவர் இட்ட கட்டளை. “ஓராண்டுகாலம் மறைந்து வாழவேண்டும்” இது இரண்டாவது கட்டளை.
மேலும் விளக்கம் நூலாசிரியர் தருகிறார். படித்துத் தெளியுங்கள். நூலாசிரியர் 33 ஆண்டுகள் தமிழாசிரியராகவே பணிபுரிந்தவர். வடமொழி, தமிழ் மொழி இரு மொழிப் புலமைமிக்கவர்.
நூலாசிரியர். சீவகச் செல்வர் புலவர், சீனி. கிருஷ்ணஸ்வாமி அவர்களின் இரண்டாவது படைப்பாக, சிறப்புயர் சீவக சிந்தாமணி, என்றும் தலைப்பில் இந்நூல் வெளிவருகிறது. தமிழாசிரியர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் படித்து இன்புற வேண்டும்.