யவனிகா ஸ்ரீராம் (1959)
இளங்கோவன் என்ற இயற்பெயர் கொண்ட யவனிகா ஸ்ரீராம், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி என்ற மலையடிவார ஊரைச் சேர்ந்தவர். இராமசாமி மகமாயி தம்பதியினரின் இரண்டாவது மகனாகிய இவர், பள்ளிக் காலத்திலேயே கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். காபி வியாபாரத்தின் பொருட்டு சிறுமலை மற்றும் மேற்கு மலை சரிவுகளில் 18 வருடங்கள் அலைந்தவர். துணி வியாபாரத்திற்காக இந்தியாவின் பல பகுதிகளில் பயணித்திருக்கிறார். என்பதோடு பலமுறை வணிகத்திற்கென மலேசியா சிங்கப்பூர் வரை போய் வந்தவர். இலக்கியச் சந்திப்பிற்கென ஒருமுறை இலங்கை வரையும் சென்று வந்துள்ளார்.
தன்னுடைய படைப்புகள் அனைத்தும் தனது பயணங்களால் ஒரு சித்து நிலையில் சேகரிக்கப்பட்டது என்று கூறும் இவரிடமிருந்து இதுவரை எட்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி கன்னடம் மற்றும் இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் தமிழ் முதுநிலை மாணவர்களுக்கிடையே நவீன கவிதைகள் குறித்து அவ்வப்போது பயிற்சி அளித்து வருகிறார். இவருடைய படைப்புகள் இன்றைய பின்காலனிய அல்லது மறு காலனியப் பிரச்சினைகள் குறித்து அதிகம் கவனம் கொண்டவையாக இருக்கின்றன.
மக்களுக்கும் சந்தைக்குமான உறவுகள் ஓருலகமயமாக்கல் போன்றவற்றால் உலகெங்கிலும் உள்ள பிராந்திய தேசியக் கலாச்சாரங்கள் எவ்வாறு சீரழிகின்றன. ஒரு தனி மனிதன் இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் என்னவாக இடம் பெறுகிறான். என்பதை ஒரு அரசியல் பார்வையோடு பல இலக்கியச் சந்திப்புகளிலும் அவை பற்றிப் பேசி வருபவர். அனைத்தும் திறந்து விடப்பட்டிருக்கும் இன்றைய தாராளவாதப் பொருளாதாரத்தில் தூண்டப்பட்ட ஆசைகளுடன் முன்னம் இருந்த எளிய வாழ்வை மறந்து மனிதன் யூகப்பொருளாதாரத்தின் வேட்டை விலங்காய் மாறிப் போனதன் அவலங்களோடு வேகமும் ஆற்றலும் எவ்வாறு ஒரு அழிவாய் உலகைச் சூழ்ந்து இருக்கிறது எனும் பார்வையை நம்முன் வைக்கின்றன. அந்த வகையில் உலகளாவிய நவீன கவிதைகளுக்கு இணையாகத்தமிழில் ஒரு பாய்ச்சலாக வெளிப்பட்டிருப்பவை இவரது படைப்புகள்.
தமிழின் சங்ககாலத்திணை மரபுகளில் இருந்து அதன் தொடர்ச்சியாய் நாம் வாழும் இன்றைய நவீனகாலத்திற்கான புதிய திணைகளை தலித்தியம் பெண்ணியம் சூழலியம் போன்ற நுண்ணரசியல்களையும் இணைத்து அதன் பாடு பொருட்களோடு தனக்கேயான தனித்தவகைமையுடன் எழுதுவதில் முதன்மையானவர்! என்று ரமேஷ் பிரேம் கலாப்பிரியா ஞானக்கூத்தன் கல்யாண்ஜி முருகேச பாண்டியன் போன்ற சக கலைஞர்களின் பாராட்டுகளையும் பல விருதுகளையும் பெற்றவர். சில கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இவரது கவிதைகள் வைக்கப்பட்டுள்ளன.மட்டுமல்லாமல் பரிசோதனை முயற்சியாகச் சில சிறுகதைகளையும் எழுதி உள்ளார்.
கவிஞர் செல்வா பிரியதர்ஷன் ஸ்ரீ சங்கர் இருவராலும்“வீடற்றவர்களின் உலகம்” என்கிற இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் கொண்ட ஒரு தொகுப்பும் வெளி வந்திருக்கிறது. கவிஞர் ஷங்கர் ராமசுப்பிரமணியன் அவர்களால் “யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் வாசிப்பு உரை” என்கிற தொகுப்பும் சமீபத்தில் வந்துள்ளது.
இதுவரை பெற்ற விருதுகள்:
சிறந்த கவிஞருக்கான ஆனந்த விகடன் விருது, விருத்தாச்சலம் களம் புதிது விருது, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விருது, பாண்டிச்சேரி மீறல் இலக்கியக் கழகத்தின் கபிலர் விருது. திண்டுக்கல் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பாப்லோ நெரூதா விருது.