ஹா ஹா என்று ருசிக்க ருசிக்க சிவத்தை அனுமதித்து அடியவர்கள் வாழ்வு துயரமாய் இருந்தபோதெல்லாம் அன்பினால் தம்மை சிவத்தோடு உயரமாக்கிக் கொண்டார்கள். நாமும் சிவம் செயல்பட நம்மைத் திறந்து அனுமதித்தால் எம் சிவமே என்று அவரிடம் பேசி உயரலாம். இது சாத்தியமே.
அப்படி நெருங்கி நம் மீது பாசம் பொழியும் சிவத்தை அனுபவிக்க இந்த வாழ்வின் சிக்கல்களை சிவத்திடம் பகிரும் கவிதை வாய்ப்பு எப்படி இருக்கும் என இக்கவிதைகள் மூலம் நெருக்கமாக அறியலாம்.
“எம் சிவமே” என்ற இக்கவிதைத் தொகுப்பு எங்கோ இருப்பது சிவமல்ல. எங்கும் இருப்பது சிவம் என்று பேசும் அன்புக் கவிதைகளின் பரிமாறல்.
கணையாழியில் சுஜாதா மூலம் 1993 முதலாக அறியப்படும் பா. சத்தியமோகன்(23.06.1964), திருச்சி மாவட்டம் துறை மங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நெய்வேலியில் மின்பிரிவில் தலைமைப் பொறிமேலாளர். அனுபவித்து நேர்வதைச் சொற்களால் துழாவி பிரபஞ்சம் முழுவதையும் தேடுபவராகவும்; தேடலின் வழியே பிரபஞ்சமே கவிதையாய் நேர்வதாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளும் மன உலகப் பயணம் இவருடையது.
வாழ்வின் அழுத்தமான ஒவ்வொரு கணத்திலும் ஒரு நடசத்திரத்தைத் தேடி எடுப்பவராகவும்; சீரான நிகழ்வுகள் நடுவே அபத்தம் ஒளிந்திருப்பதையும் தனக்கே உரிய மொழி லாவகத்தோடு பகிர்பவர். சங்ககால மொழி துவங்கி நவீன கவிதை இயங்குமுறை வழியே தனது முப்பதாண்டு கவிதை வாழ்வை 15 தொகுப்புகள் மூலமாக தமிழ் சமூகம் அறியத் தந்தவர். சமகால நவீனக் கவிதைகளில் ஞானகூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தேவதேவன், ஆத்மாஜீவ் வழியே, கவிதைமூலம் பேருண்மை மீது வரைந்த மொழிச் சித்திரங்களாக இவரது கவிதைகளை வாசகன் கவனிக்க முடியும்.