காற்று எல்லோருக்கும் சீராகப் பாய்கிறது. நாம் பிறக்கும்போதிலிருந்து இறக்கும் வரை நமக்கு வழங்கப்படும் தங்கு தடையில்லாத காற்றில் நாம் ஏன் நமது தேன் மல்லிப் பூவின் நம்பிக்கை யுக்தியும் கலந்துகொள்ளவில்லை? கலந்து கொண்டால் நம் வாழ்க்கை தித்திப்பு குலோப் ஜாமூன் ஆகிவிடும் என்றே இக்கட்டுரைகள் பேசுகின்றன. தேவைப்படுவதெல்லாம் விழிப்புணர்வு மட்டுமே. அதனால்தான் இக்கட்டுரைத் தலைப்பு ஒவ்வொன்றுக்கும் தேன்மல்லிப் பூ என்ற தலைப்பு சூடி இருக்கிறது.
கணையாழியில் சுஜாதா மூலம் 1993 முதலாக அறியப்படும் பா. சத்தியமோகன்(23.06.1964), திருச்சி மாவட்டம் துறை மங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நெய்வேலியில் மின்பிரிவில் தலைமைப் பொறிமேலாளர். அனுபவித்து நேர்வதைச் சொற்களால் துழாவி பிரபஞ்சம் முழுவதையும் தேடுபவராகவும்; தேடலின் வழியே பிரபஞ்சமே கவிதையாய் நேர்வதாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளும் மன உலகப் பயணம் இவருடையது.
வாழ்வின் அழுத்தமான ஒவ்வொரு கணத்திலும் ஒரு நடசத்திரத்தைத் தேடி எடுப்பவராகவும்; சீரான நிகழ்வுகள் நடுவே அபத்தம் ஒளிந்திருப்பதையும் தனக்கே உரிய மொழி லாவகத்தோடு பகிர்பவர். சங்ககால மொழி துவங்கி நவீன கவிதை இயங்குமுறை வழியே தனது முப்பதாண்டு கவிதை வாழ்வை 15 தொகுப்புகள் மூலமாக தமிழ் சமூகம் அறியத் தந்தவர். சமகால நவீனக் கவிதைகளில் ஞானகூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தேவதேவன், ஆத்மாஜீவ் வழியே, கவிதைமூலம் பேருண்மை மீது வரைந்த மொழிச் சித்திரங்களாக இவரது கவிதைகளை வாசகன் கவனிக்க முடியும்.