முகம் பார்க்க கண்ணாடி உதவும். நமது குணம் என்ன என அறிய புத்தி என்ற கண்ணாடி அணிந்து அன்றாடம் நிமிடங்கள் ஒதுக்கி நாமே நம்மை ஆராய்வது தான் வழியாகும்...
“தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகட்டும்” என்ற தீங்கான எண்ணம், மனிதன் தன் தலையில் தானே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை அறிய வேண்டும். நம்மை நம்மிடமிருந்து மீட்டால் வெற்றி நிச்சயம். அப்படியெனில் நிஜமாகவே நாம் யார் என்பதை அறிந்து மீண்டு வருவதற்கு இந்தக் கட்டுரைகள் ஓர் ஆரம்பம் தரும்.
கணையாழியில் சுஜாதா மூலம் 1993 முதலாக அறியப்படும் பா. சத்தியமோகன்(23.06.1964), திருச்சி மாவட்டம் துறை மங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நெய்வேலியில் மின்பிரிவில் தலைமைப் பொறிமேலாளர். அனுபவித்து நேர்வதைச் சொற்களால் துழாவி பிரபஞ்சம் முழுவதையும் தேடுபவராகவும்; தேடலின் வழியே பிரபஞ்சமே கவிதையாய் நேர்வதாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளும் மன உலகப் பயணம் இவருடையது.
வாழ்வின் அழுத்தமான ஒவ்வொரு கணத்திலும் ஒரு நடசத்திரத்தைத் தேடி எடுப்பவராகவும்; சீரான நிகழ்வுகள் நடுவே அபத்தம் ஒளிந்திருப்பதையும் தனக்கே உரிய மொழி லாவகத்தோடு பகிர்பவர். சங்ககால மொழி துவங்கி நவீன கவிதை இயங்குமுறை வழியே தனது முப்பதாண்டு கவிதை வாழ்வை 15 தொகுப்புகள் மூலமாக தமிழ் சமூகம் அறியத் தந்தவர். சமகால நவீனக் கவிதைகளில் ஞானகூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தேவதேவன், ஆத்மாஜீவ் வழியே, கவிதைமூலம் பேருண்மை மீது வரைந்த மொழிச் சித்திரங்களாக இவரது கவிதைகளை வாசகன் கவனிக்க முடியும்.