அகக்காட்சி பெரிதும் பேசப்படும் சத்தியமோகன் கவிதைகளில் டிமானிடைசேஷன், இயந்திரம் தின்கிறாள் பெண், மூட முடியாத பேனா போன்ற புறக்கவிதைகளும் சிறப்புறப் பேசப்படுகின்றன.
இயற்கைக் காட்சிகளில் சூரியன் ஓர் அனாதையாக வருணிக்கப்படுகிறது. ஏனெனில் பல நாட்களாக மழை பொழிவில் எல்லாம் ஈரமாகி சொத சொத நீரில் சூரியனது வெய்யிலுக்காக மக்கள் ஏங்குவது சொல்லப்பட்டு ஒருநாள் சூரியன் வெய்யில் மக்கள் மீது விழும்போது பூமியில் ஒருவர் கூட அண்ணாந்து பார்க்கப்படாத சூரியன் ஓர் அனாதை என்கிறார் கவிஞர். ஆனால் சூரியன் மனிதர்கள் பாராட்டு இல்லாமையை புறம் தள்ளி தொடர்ந்து செயல்படுவதால் கம்பீரம் என்று வருணிக்கிறார். “அனாதையின் கம்பீரம்” கவிதையில்.
கணையாழியில் சுஜாதா மூலம் 1993 முதலாக அறியப்படும் பா. சத்தியமோகன்(23.06.1964), திருச்சி மாவட்டம் துறை மங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நெய்வேலியில் மின்பிரிவில் தலைமைப் பொறிமேலாளர். அனுபவித்து நேர்வதைச் சொற்களால் துழாவி பிரபஞ்சம் முழுவதையும் தேடுபவராகவும்; தேடலின் வழியே பிரபஞ்சமே கவிதையாய் நேர்வதாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளும் மன உலகப் பயணம் இவருடையது.
வாழ்வின் அழுத்தமான ஒவ்வொரு கணத்திலும் ஒரு நடசத்திரத்தைத் தேடி எடுப்பவராகவும்; சீரான நிகழ்வுகள் நடுவே அபத்தம் ஒளிந்திருப்பதையும் தனக்கே உரிய மொழி லாவகத்தோடு பகிர்பவர். சங்ககால மொழி துவங்கி நவீன கவிதை இயங்குமுறை வழியே தனது முப்பதாண்டு கவிதை வாழ்வை 15 தொகுப்புகள் மூலமாக தமிழ் சமூகம் அறியத் தந்தவர். சமகால நவீனக் கவிதைகளில் ஞானகூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தேவதேவன், ஆத்மாஜீவ் வழியே, கவிதைமூலம் பேருண்மை மீது வரைந்த மொழிச் சித்திரங்களாக இவரது கவிதைகளை வாசகன் கவனிக்க முடியும்.