சில புத்தகங்களைப் பாராட்டும்போது, ‘ஒரு முறை கையில் எடுத்துவிட்டால் கீழே வைக்க மனம் வராது' என்று சொல்வதுண்டு. மார்க் ட்வைன் ஒரு புத்தகத்தை விமர்சனம் செய்யும்போது, 'ஒருமுறை இதைக் கீழே வைத்துவிட்டால் கையிலெடுக்க மனம் வராது' என்று நையாண்டி செய்தார்.
உங்கள் கையிலுள்ள இந்தத் தொகுப்பு முதல் வகையா, இரண்டாவது வகையா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக எல்லாக் கட்டுரைகளும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று மட்டும் சொல்வேன். காரணம், படிப்பவரைச் சிந்திக்க வைத்து, சமூகத்தைப் பற்றிக் கவலை கொள்ள வைக்கும் ஆற்றல் என் எழுத்துக்குக் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுரை இந்தத் தொகுப்பில் ஒன்றிரண்டு இருக்குமானால், அது வேறொருவர் சொன்னதாகவோ, வேறொரு பத்திரிகை அல்லது புத்தகத்தில் படித்ததாகவோ இருக்கும்.
ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுத எங்கிருந்து ஐடியா கிடைக்கிறது என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். எனக்கும் அது தெரியவில்லை. அதனால்தான் இந்தத் தொகுப்புக்கு 'எங்கிருந்து வருகுதுவோ' என்று தலைப்புக் கொடுத்திருக்கிறேன்.
- ரா.கி.ரங்கராஜன்
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா