சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட 5 விருதுகள் பெற்ற இந்நூல் அன்றைய கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கரங்களால் ஜெயந்தன் இலக்கிய விருதும் பெற்றது. 2010-ல் சிதம்பரத்தில் சேக்கிழார் நினைவு மண்டபத்தில் எமது குருநாதர். தவத்திரு. கோவை சிவப்பிரகாச சுவாமிகள் வெளியிட்டு அருளினார். அறுபத்து மூன்று பேரும் அறுபத்து மூன்று பாதைகளில் சிவன் சேவடிப் பேறு கொள்ள தத்தம் நெஞ்சுக்குள் நடத்திய உழவாரப் பணியாகவே, அறப்போராட்டமாகவே பெரியபுராணத்தை (4281 பாடல்கள்) வடித்த அருண்மொழித்தேவர் என்னும் சேக்கிழார் அன்றைய தமிழக முதலமைச்சர். அவர் சேமித்த காலத் தமிழ் சொத்து, தமிழர்களுக்கே உரியது. பாக்கியமும் உரிமையும் பக்தியும் கொண்டு சிவன்கழல் தொழுவோம். புஸ்தகா நிறுவனம் இந்நூலை மிகச்சிறப்பான முறையில் பதிப்பித்து சமூகப்பணி ஆற்றியுள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும்.
கணையாழியில் சுஜாதா மூலம் 1993 முதலாக அறியப்படும் பா. சத்தியமோகன்(23.06.1964), திருச்சி மாவட்டம் துறை மங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நெய்வேலியில் மின்பிரிவில் தலைமைப் பொறிமேலாளர். அனுபவித்து நேர்வதைச் சொற்களால் துழாவி பிரபஞ்சம் முழுவதையும் தேடுபவராகவும்; தேடலின் வழியே பிரபஞ்சமே கவிதையாய் நேர்வதாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளும் மன உலகப் பயணம் இவருடையது.
வாழ்வின் அழுத்தமான ஒவ்வொரு கணத்திலும் ஒரு நடசத்திரத்தைத் தேடி எடுப்பவராகவும்; சீரான நிகழ்வுகள் நடுவே அபத்தம் ஒளிந்திருப்பதையும் தனக்கே உரிய மொழி லாவகத்தோடு பகிர்பவர். சங்ககால மொழி துவங்கி நவீன கவிதை இயங்குமுறை வழியே தனது முப்பதாண்டு கவிதை வாழ்வை 15 தொகுப்புகள் மூலமாக தமிழ் சமூகம் அறியத் தந்தவர். சமகால நவீனக் கவிதைகளில் ஞானகூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தேவதேவன், ஆத்மாஜீவ் வழியே, கவிதைமூலம் பேருண்மை மீது வரைந்த மொழிச் சித்திரங்களாக இவரது கவிதைகளை வாசகன் கவனிக்க முடியும்.